மாகாணசபை தேர்தல் தொடர்பில் யாழில் தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

தனிநபர் பிரேரணையூடாக மீண்டும் பழைய முறைமையில் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் தேர்தலை விரைவில் நடத்த முடியும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க  தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்றையதினம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 

சர்வதேச ஜனநாயக தினம் இன்று உலகின் ஜனநாயகம் மிக்க நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் நிலையில் குறித்த நிகழ்வின் விழிப்புணர்வு நிகழ்வுகள் யாழ் மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடத்துதல் மட்டுமல்ல அந்த நிலையை மக்களிடையே கொண்டு சென்று இலக்கை அடைவதுமாகும்.

குறிப்பாக இளம் பிரைஜைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நவீனத்துவங்களை உள்வாங்குதல் என்பனவும் இதில் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய பொறிமுறைகளாக இருக்கின்றன.

இதனடிப்படையில் நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

குறிப்பாக இன்று மற்றும் நாளை முன்னெடுக்கப்படும் இந்த விழிபுணர்வு நிகழ்வுகளின் முதன்மையானதாக தேர்தல் திணைக்களத்துடனான தகவல் தொழில் நுட்பத்தின் வகிபாகத்தை நெடுந்தீவு மக்களுக்கு கொண்டுசெல்வதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதே நேரம் மாகாணசபை தேர்தல் நடைபெறாது காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது தொடர்பில் கூறுகையில் – 

விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டமையே இதற்குகாரணம்.

இந்த சட்ட வரைமுறையால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது.

இது தீர்க்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடைபெறும். அதற்கு திணைக்களம் தயாராக இருக்கின்றது.

அல்லது குறித்த தீர்மானத்தை தற்போது நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணையூடாக நிறைவேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *