ஒரே இடத்தில் பேருந்து, ரயில் மற்றும் டாக்ஸி சேவைகளை மக்கள் பெறலாம்; 2029க்குள் இலங்கையில் வரவுள்ள மாற்றம்!

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் 15 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பேருந்து, ரயில் மற்றும் டாக்ஸி ஆகியவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடிய வகையில் பல்வகை போக்குவரத்து மையங்கள் கட்டமைக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

கொழும்பு உட்பட மேலும் பல பேருந்து நிலையங்களை மேம்படுத்துவதே அமைச்சின் நோக்கம் என்று அமைச்சர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

புறக்கோட்டையில் உள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் ‘க்ளின் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ்  425 ரூபா மில்லியன் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது 08 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்படுகின்றது.

குறித்த புனரமைப்பின் கீழ், பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறுவப்படவுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *