ஐஸ் போதைப்பொருளை தயாரித்த வீடு கண்டுபிடிப்பு – சிக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினரின் சகா

ஹம்பாந்தோட்டையின் மயூரபுர பகுதியில்  அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இந்த சோதனையின் போது, ​​ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாயவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்காவின் சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த வீட்டில் மூன்று ஈரானியர்கள் ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாகவும், பின்னர் கெஹெல்பத்தர பத்மேவின் தரப்பினருக்கு சுமார் 14 கிலோ ஐஸ் போதைப்பொருளை விற்றதாகவும் சந்தேக நபர் கூறியதாக கூறப்படுகிறது. 

குறித்த மூன்று ஈரானியர்கள் இப்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.  

சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

இந்தோனேசியாவில் அண்மையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும்.

முன்னதாக, நுவரெலியா, மித்தேனியா, நெட்டோல்பிட்டிய மற்றும் கந்தானை  ஆகிய இடங்களில்  ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தியதாக கூறப்படும்  ரசாயனதொகையை அதிகாரிகள் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *