செம்மணி படுகொலை கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
படையாண்ட மாவீரா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அந்த திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான வ.கௌதமன் அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அறம் கொண்ட எதையும் இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. சில காலம் மறைக்கலாம் ஆனால் அது மறுபடியும் எழுந்து வரும் கீழடி போல.
20 வருடங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானவர்களை புதைத்த செம்மணி மண்ணில் இன்று சிங்களவர்களும் வந்து ஆய்வு செய்து தினம் தினம் தோண்டி எடுக்கின்றனர்.
பிறந்த குழந்தையின் கழுத்தில் கால் கட்டை விரலை வைத்து அழுத்தும்போது அந்த குழந்தை கத்துவதை இரசிப்பது என்பது என்ன மனநிலை?
என் தாய்க்கும், தாய் மொழிக்கும் சமமான தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறமாக ஆண்ட அந்த மண்ணில் நடந்த அந்த கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது.
தோழர் தமிழரசன் வரலாற்றை படைப்பாக்க வேண்டும். மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றை படைப்பாக்க வேண்டும். சரிந்து கிடக்கின்ற இந்த தமிழினத்தை தலை நிமிர்த்த, மீண்டும் ஒரு புதிய வரலாற்றை படைக்க, எம் தமிழினத்தின் எதிரிகளை தலை குனிய வைப்பதற்கு, எமது இனத்தின் எதிரிகள் எவரும் தலை தூக்கி நிமிரும்போது அவர்களை வெட்டி மண்ணோடு மண்ணாக புதைப்பதற்காக இந்த வரலாறுகளை படைக்க வேண்டும் – என்றார்.




