கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகள் கொள்ளை; காதலன் என பொலிஸில் முறைப்பாடளித்த பெண்!

பெண்ணொருவரின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி விட்டு நகைகளைப் பறித்துச் சென்ற நபர் தனது காதலன் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

இந்தச் சம்பவம் களுத்துறை, இங்கிரிய, ஹதபான்கொட பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் தெரியவருகையில், 

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவர் இளைஞன் ஒருவனுடன் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பெண் கடந்த 16 ஆம் திகதி இரவு வழமைபோல ஆடைத் தொழிற்சாலையில் கடமைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தார். 

அதன்போது வீதியில் மறைந்திருந்த ஒருவர்  பெண்ணின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவரிடமிருந்த தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் பிரதேசவாசிகளின் உதவியுடன் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் இது தொடர்பில் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.  

முறைப்பாட்டில், தனது கண்களில் மிளகாய் பொடியை தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர் தனது காதலன் என அந்த பெண், பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  இங்கிரிய பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply