எனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது ஆகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் “உங்கள் கருத்தைக் கைவிடாதீர்கள் – அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளின் நிகழ்வு ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
நான் பதவியில் இருந்த காலத்தில் எனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக என் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால் நான் சென்றது உத்தியோகபூர்வ பயணம் ஆகும். இதனை நான் நிரூபித்தும் அவர்கள் என்னை கைது செய்தனர்.அழைப்பிதழை காண்பித்தும் அவர்கள் என்னை விளக்கமறியலில் வைத்தனர்.
ஆனால் எனக்காக அனைத்து கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் ஒன்றைிணைந்தனர்.எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதலில் ஆரம்பித்தது நாங்கள் தான்.
ஆனால் போலி குற்றச்சாட்டுக்களின் கீழ் மோசடியான முறையில் அரசியல் தவைவர்களை கைதுசெய்ய நாங்கள் விடமாட்டோம். அதற்கு எதிராக நாங்கள் போராடுவோம்.
நாங்கள் பயந்து ஒதுங்குவோம் என்று நினைத்தார்கள். மோசடியான முறையில் அரசியல் தவைவர்களை கைதுசெய்ய முயன்றால் நாங்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.
எந்தவொரு சவால்களுக்கும் முகம் கொடுக்க நாங்கள் தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.