திருகோணமலை – நீரோட்டுமுனை பிரதேசத்தில் இருந்து இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீரோட்டுமுனை – வெள்ளைமணல் பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான முஹம்மது ஹைதர் முஹம்மது அசாத் என்பவரே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இவர் கடந்த சனிக்கிழமை (27) மாலை 4 மணி அளவில், தனது வீட்டிலிருந்து கடலுக்குச் சென்றதாகவும், மாலை 5 மணி அளவில், தான் சென்ற படகு இயந்திரம் இயங்கவில்லை என தனது முதலாளிக்கு அறிவித்திருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
டிஸ்கோ வலை போட்டு மீன்களை பிடிப்பதற்காக, கடலில் உள்ள மீன்களின் நிலவரம் தொடர்பாக, இரவில் வெளிச்சம் போட்டு அறிந்து கொள்வதற்கு முதலில் ஒருவரை ஆழ்கடலுக்கு அனுப்புவது, இந்த தொழிலின் ஒரு பிரதான படி நிலையாகும்.
அந்த முறைமையிலே, இந்த காணாமல் போன நபரும் அன்று மாலை கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் கரையை வந்தடையவில்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர், மஞ்சள் மற்றும் சிகப்பு கோடிடப்பட்ட, வெள்ளை நிற நில்மிரின் என்ற படகிலே சென்றதாகவும், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்




