வவுனியாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து தரிப்பு நிலையத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது- 18) என்பவரே உயிரிழந்தவராவார்.
இந்த விபத்துச் சம்பவம் வவுனியா- இராசேந்திரம் குளம் பகுதியில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இராசேந்திரன்குளம் பாடசாலைக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




