பிள்ளைகளை வாள்வெட்டில் ஈடுபடுமாறு வற்புறுத்தல்; பாதுகாப்புக் கோரி அரசடி மக்கள் ம.உ ஆணைக்குழுவில் முறைப்பாடு!

தமது பிள்ளைகளை வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு நபரொருவரால் வற்புறுத்தப்படுவதாக அரசடி மக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ.பிராந்திய காரியாலயத்தில் இன்று (09) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

முறைப்பாட்டில் தமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, பிரதேச வாழ் மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு  தெரிவித்துள்ளனர். 

முறைப்பாட்டை  மேற்கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள், 

குறித்த நபர் நீண்டகாலமாக பல்வேறு சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றுவரும் ஒருவர். எமது அரசடி பகுதியில் வாள்வெட்டு சம்பவங்கள்  இவரது பின்னணியில்தான் நடைபெற்று வருகின்றது.

இவை குறித்து பொலிசாருக்கு முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் நாம் நாளாந்தம் பொரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றோம்.

இந்நிலையில், அண்மையில் அரசடியில் குறித்த சட்டவிரோத நபரால் வெளியூரில் இருந்து சிலர் வரவழைக்கப்பட்டு வாள் வெட்டு சம்பவம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எமது பிள்ளைகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கையில் இறங்கினர்.

இதன்போது ஒருவர் காயங்களுக்குள்ளானார். இதைக் காரணமாக வைத்து  எமது ஏழு பிள்ளைகளை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை பொலிசார் கைது செய்யவில்லை.

இன்னிலையில் தான் எமது பிள்ளைகள் மீது தேவையற்ற வகையில் சோடிக்கப்பட்ட வழக்குகள் பொலிசாரால் பதியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியே இன்று மனித உரிமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *