நுவரெலியா – நோர்வூட் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோர்வூட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மற்றும் அருகிலுள்ள வீடு மீது மின்னல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
அத்துடன் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் வீட்டில் இருந்த ஒருவர் தரையில் மயங்கி விழுந்து காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மழையுடன் இடி மின்னல் தாக்கியதால் நோர்வுட் பகுதியில் திடீர் மின் தடை ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையால் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நாட்டில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









