கட்டுக்கரை குளத்துக்குள் சட்டவிரோத விவசாயம்..! 17 விவசாய சங்கங்கள் வழக்குதாக்கல்

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் கடந்த காலங்களாக சிறுபோக பயிர்செய்கைக்கான நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இக்குளம் கடந்த காலத்தில் குடிநீர் மற்றும் விவசாய நீர் விநியோகத்துக்கு முக்கியமாக பயன்படுகிறது. 

ஆனாலும் சட்டவிரோதமாக குளத்துக்குள் குடியிருப்புகள் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்படுவதை பொது மக்கள் மற்றும் 17 விவசாய சங்கங்கள் இணைந்து வழக்கு ஒன்றை மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கு தொடுனர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

இதை தொடர்ந்து விவசாய சங்கங்களுக்கு குளத்துக்குள் குடியிருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் உறுதி வழங்கியிருப்பதாக, வழக்கின் பின்னர்   ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 

​கட்டுக்கரை குளம் சம்பந்தமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திலே, 17 விவசாயச் சங்கங்கள் தாக்கல் செய்த மனு ஒன்று இப்பொழுது நிலுவையிலே இருக்கிறது. 

அந்த மனுவிலே, குளத்துக்குள்ளேயே சிலர் அநாகரிகமாக விவசாயம் செய்கிறார்கள், அவர்களை வெளியேற்றுவதற்கு அரசாங்க நிறுவனங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

அப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஒரு எழுத்தாணை கோரி,  17 விவசாய சங்கங்கள் சார்பிலே எழுத்தாணை வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

​இந்த வழக்கு விசாரணையின் போது, அந்தக் குளத்துக்குள்ளே குடியிருக்கிறவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை  எடுப்போம் என்று மன்றிற்கு உறுதி அளிக்கப்பட்டது.

அதனுடைய முன்னேற்றத்தை அதாவது அவர்களுடைய நடவடிக்கைகளுடைய முன்னேற்றத்தை டிசம்பர் முதலாம் தேதி மன்றிற்கு தெரியப்படுத்துவதாக கூறப்பட்டது.

​குறித்த வழக்கு டிசம்பர் முதலாம் தேதி நீதிமன்றத்திற்கு வரும் போது, எத்தனை பேரை வெளியேற்றி இருக்கிறார்கள், இன்னமும் எத்தனை பேர் வெளியேற்றப்பட இருக்கிறது என்ற விவரங்களை சட்டமாதிபர் மன்றிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *