வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் ‘மோந்தா'; கடற்றொழிலாளர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று புயலாக மாற்றமடையும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.

அவரால்  வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் 

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது இன்று அதிகாலை புயலாக மாற்றமடையும். 

இதன் காரணமாக நாளை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று  முதல் பரவலாக மழை கிடைக்கும். 

மீண்டும் வடக்கு வங்காள விரிகுடாவில் மியன்மாருக்கு அருகில் எதிர்வரும் 04 ஆம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. 

இது மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இதன் நகர்வு திசை, மற்றும் ஏனைய விபரங்களை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.    

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறைவான மழையுடன் கூடிய வானிலை நிலவும் வாய்ப்புக்கள் உள்ளன என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து “மோந்தா” என்ற புயலாக தீவிரமடைந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 610 கிமீ தொலைவில், நிலை கொண்டுள்ளது. 

இந்த நிலை வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை ஒரு புயலாக மேலும் தீவிரமடைந்து நாளை  மாலை  ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *