முல்லை அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு உதவிப்பணிப்பாளர் – ரவிகரன் எம்.பி சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின்  உதவி பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில்  நேற்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களது தலைமை அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எதிர்கால அனா்த்தக்குறைப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவின்  ஆளணி மற்றும் வளத் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இச்சந்திப்புத் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 19ஆற்றுப்படுக்கையும், 21பெரிய நீர்ப்பாசனக் குளங்களும், 481சிறிய நீர்ப்பாசனக்குளங்களும் காணப்படுவதாகவும், இவற்றில் பெரும்பாலானவை காட்டுப்பகுதியில் காணப்படுவதால் முறையான பராமரிப்பின்றிக்காணப்படுவதால் நீர்நிலைகளின் சமநிலை பேணப்படாமல் காணப்படுவதுடன் வெள்ளஅனர்த்தம் ஏற்படுவதாக அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப்பணிப்பாளரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது. 

எனவே ஆற்றுப்படுக்கைகளை வரையறைசெய்யப்பட்டு முறையாக உரிய திணைக்களங்களிடம் கைளித்து பாராமரிப்பது மற்றும் குளங்கள், ஒதுக்கப்பட்ட பகுதிகளை முகாமைத்துவம் செய்வதன்மூலம் வெள்ள அனர்த்தத்தினை குறைக்கமுடியுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் ஒவ்வோராண்டும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள கிராமங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன், அக்கிராம மக்களின் நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையில் நிரந்தர தீர்வினை ஏற்படுத்துவது தொடர்பிலும் பேசப்பட்டது. 

இதேவேளை பிரதேச சபை மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிகள் பெறப்படாமல் மேற்கொள்ளப்படுகின்ற முறையற்ற சட்டவிரோத கட்டுமானங்களால் திடீர் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டி அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்படவேண்டுமெனவும் தெரிவித்தார். 

இதுதவிர யானை, மனித மோதலை கட்டுப்படுத்துவது, குரங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளை கட்டுப்படுத்துவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் தீ அணைப்பு பிாிவினை உருவாக்குதல், வெளிச்சவீடு அமைத்தல், சுனாமி மற்றும் கடல்சாா் அனா்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடு, எதிா்வரும் வடகீழ் பருவமழையால் ஏற்படக்கூடிய அனர்த்த முகாமைத்துவ தயாா்படுத்தல் தொடா்பாகவும் பேசப்பட்டது. 

மேலும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவில் காணப்படுகின்ற வளப்பற்றாக்குறைகள் மற்றும் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

குறிப்பாக முல்வைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு 03அனுமதிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் நியமன வெற்றிடங்கள் காணப்படுகின்றபோதும் தற்போது ஒருவர் மாத்திரமே பணியாற்றி வருவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளரினால்  முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள், குறைபாடுகள் தொடர்பில் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *