65வது நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்; ஆளும்கட்சி எம்.பிக்களின் கொடும்பாவிகள் எரிப்பு

திருகோணமலை – முத்துநகர் – தகரவட்டுவான் விவசாய  நிலப் பகுதியில் இன்று (20) கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள், தாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களை இழந்ததால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.  

குறித்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அரசாங்கத்துடன் பல முறை தீர்வு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. 

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமர், விவசாயிகளை சந்தித்து தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தாலும், அதுவும் மேலும் காலதாமதமாக மாறியுள்ளதாக காணப்படுகிறது.

பிரதமர் அலுவலகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது, மாவட்டத்தின் ஆளுங்கட்சியின் சில பிரதிநிதிகள் மற்றும் சில பிரதேச அதிகாரிகள் இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியிருப்பது வெளிச்சத்துக்கு வந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறிய தவறான தகவல்களில் — முத்துநகர் பகுதியில் முன்பாகவே குளம் இருந்ததில்லை,

இருந்த குளங்கள்  மூடப்படவில்லை, மற்றும் இப்பகுதியில் சரியான விவசாய நிலங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் அடங்குகின்றன.

மேலும், தஹரவட்டுவான் குளத்தையும் எதிர்வரும் நாட்களில் அழிக்கும் திட்டங்கள் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தநிலையில், மேலே குறிப்பிடப்பட்ட செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (20) மழையை கூட பொருட்படுத்தாமல் தஹரவட்டுவான் குளப் பகுதியில்  நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டமும் தொடராக இன்றும் 65 ஆவது நாட்களாக  தொடர்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *