மூதூரில் அம்மாவின் நகையையே திருடிய மகன் – நீதிமன்றிலிருந்து தப்பியோட்டம்

 

அம்மாவின் நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மகன் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த 22 வயதுடைய அவரது மகன்  பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அப்போது எதிர்வரும் 28ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

அதன் பின்னர் அந்தக் கைதி சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டு பேருந்தில் ஏற்றுவதற்கு கொண்டு செல்லும்போது, தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

அந்த இளைஞன் தாயின் கழுத்தில் இருந்த சங்கிலி வளைந்திருப்பதாகவும் அதனை சரி செய்து தருவதாகவும் கூறி போலியான நகையை வழங்கிவிட்டு குறித்த நகையை தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. 

இவர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் எனவும் கூறப்படுகிறது. 

தலைமறைவாகியுள்ள கைதியை தேடும் பணியில் மூதூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *