அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்! ரணில் சூளுரை

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

நாங்கள் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தியதால், எங்களால் இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடிந்தது. 

பங்களாதேஷிலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அங்கு வீதிக்கு இறங்கியவர்கள் மீது கடைசியில் அரசாங்கம் சுட வேண்டியதாயிற்று. 

எங்களுக்கு ஏற்பட்ட அளவு கடுமையான பிரச்சினை அவர்களுக்கு இல்லை. எவ்வாறாயினும், ஜனநாயகத்தின் ஊடாக அதைப் பாதுகாக்க நாங்கள் செயற்பட்டோம். எங்களால் அதைக் செய்ய முடிந்தது. 

உலகிலேயே இப்படிப்பட்ட வெற்றிகரமான ஒடுக்குமுறை எங்கேயும் நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 

நாம் செல்ல வேண்டிய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். வெளியிலிருந்து சொல்வது போல் இவற்றைச் செய்ய முடியாது. 

எமது பிராந்தியமான ஆசியாவில் இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் சக்திகள் இருக்கின்றனவா என்று இப்போது  ஒரு கேள்வி எழுந்துள்ளது. நாம் எதற்கும் அடிபணியாமல், இந்தப் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முடிந்தது.

பொருளாதாரத்தையும் சீர் செய்தோம்.  கோல்ஃபேஸ் போராட்டக்காரர்கள்  நாடு முழுவதும் உரத்தைக் கொடுங்கள், உணவு கொடுங்கள், எரிபொருள் கொடுங்கள் என்று கேட்டார்கள். 

அந்த மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்தோம். ஜனநாயகத்தைப் பாதுகாக்கச் சொன்னார்கள், அதையும் செய்தோம். ஊழலை ஒழிக்கச் சொன்னார்கள். ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம். 

ஆசியாவிலேயே பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றுதான் இலங்கை. நாம் இதைப் போற்ற வேண்டும். இதைப் பாதுகாக்க வேண்டும். இதை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். 

இது எந்தவொரு அரசாங்கத்தினதும் கடமையாகும். அதைச் செய்ய முடியாவிட்டால், எங்களால் ஆட்சி செய்ய முடியும் என்று எந்தவொரு அரசாங்கமும் சொல்ல முடியாது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *