யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அந்தவகையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார்.

அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு தங்கியிருந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், குழந்தைகள் பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட அவசர நிவாரணக் பொருட்கள் அமைச்சரின் ஏற்பாட்டினால் வழங்கப்பட்டன.

நீர்மட்டம் உயர்வதால் ஏற்பட்ட சுகாதார அபாயங்களைத் தவிர்க்க அத்தியாவசிய மருத்துவ வசதிகள் விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சுகாதார அதிகாரிகளுடன் அமைச்சர் சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். வெள்ளநீரில் பரவக்கூடிய தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மருத்துவ குழுக்கள் அனுப்புதல், அவசர மருத்துவப் பொருட்கள் விநியோகம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், மாவட்ட செயலாளர், பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் பாதுகாப்புப் படையினருடன் அமைச்சர் அவசர ஒருங்கிணைப்பு கூட்டத்தையும் நடத்தினார். வெள்ளநீர் வெளியேற்றம் செய்ய வேண்டிய பகுதிகள், தாழ்வான இடங்களில் தங்கியிருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றும் பணிகள், படகு மற்றும் வாகன வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.

குறிப்பாக, இன்னும் வடமாகாணத்தில் சில பகுதிகளில் வெள்ளத்தால் சிக்கியிருக்கும் குடும்பங்களை மீட்பதற்காக கூடுதல் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மின்சாரம், குடிநீர், வீதி தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீளமைக்கும் பணிகளும் அவசரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பே முதலாவது முன்னுரிமை எனவும், அரசு சார்பாக எந்தவித தாமதமும் இல்லாமல் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சந்திரசேகர் உறுதியளித்தார்.

யாழ்ப்பாணம் முழுவதும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மழை குறையும் வரை மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *