அநுராதபுரத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
40 வயதுடைய தாய் ஒருவர், தனது 04 வயதுடைய மகள் மற்றும் 08 வயதுடைய மகனுடன் மல்வத்து ஓயாவில் குதித்துள்ளார்.
இதனை கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக தாயை காப்பாற்றியுள்ள நிலையில், இரண்டு பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளை தேடும் பணிகளில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாயின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று மல்வத்து ஓயாவில் குதித்ததாக குறித்த தாய், பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து தாய், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





