சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த சில தேசிய பூங்காக்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை நாளை முதல் திறப்பதற்குச் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, வில்பத்து தேசிய பூங்கா (ஹுனுவிலகம நுழைவாயில்), யால தேசிய பூங்காவின் முதலாவது பகுதி (பலட்டுபான நுழைவாயில்), மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்கா ஆகிய பூங்காக்கள் இவ்வாறு திறக்கப்படவுள்ளன.
இந்தப் பூங்காக்களில் சில வீதிகள் தற்போதும் நீரில் மூழ்கியுள்ளதால், வீதி வலையமைப்பில் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற பகுதிகள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, குமண தேசிய பூங்கா -தும்முல்ல மற்றும் கிரிகல்பே சுற்றுலா விடுதிகள், ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா – கினிஹிரிய மற்றும் மஹா எலிய சுற்றுலா விடுதிகள், வில்பத்து தேசிய பூங்கா – மரதன்மடுவ வன விடுதி, மின்னேரியா தேசிய பூங்கா – ரம்பவில சுற்றுலா விடுதி, யால தேசிய பூங்கா (பகுதி I) ஹீன்வெவ, ஒந்தாச்சி, பழைய புத்தாவ, புதிய புத்தாவ மற்றும் மஹாசீலாவ ஆகிய சுற்றுலா விடுதிகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளன.





