கிண்ணியாவில் வெள்ளத்தின் பின்னர் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கிரவைகள்!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு, சாவாறு பகுதியில் இன்று (டிசம்பர் 4) வெள்ள நீரால் ஏற்பட்ட குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்களும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

​வெள்ளம் வடிந்த நிலையில், கால்நடை வளர்ப்போர் சாவாறு பகுதிக்குச் சென்றபோது, இந்தக் 

வெடி பொருட்களை கண்டு தகவல் அளித்துள்ளனர்.

இந்தத் தகவலின் பேரில், பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது 109 ​கை குண்டுகள், 1678 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.  

மீட்கப்பட்ட இந்தக் கை குண்டுகள், துப்பாக்கி ரவைகள் அனைத்தும் திருகோணமலை விசேட அதிரடிப்படையினரை வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டன.

வெள்ள நீரின் அதிகரித்த ஓட்டத்தால் ஏற்பட்ட பாரிய குழியொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கண்டல்காடு, சாவாறு பிரதேசம் முன்னர் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பகுதியாகும். 

இதன் காரணமாக, இந்த ஆயுதங்கள் அவர்களால் புதைக்கப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது என ​  கிண்ணியா பொலிஸ் பொறுப்பு அதிகாரி  N. G. K. பெர்னான்டோ தெரிவித்தார்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரோட்டம், புதைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது,” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

​இந்தச் சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *