அனர்த்தம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்த நிலையிலும் அது தொடர்பாக மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சூறாவளி அனர்த்தத்திற்கு முன்பாகவே அது தொடர்பான சம்பந்தப்பட்ட தரப்பினரின் அறிவிப்புகளும், யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற் துறை பேராசிரியரின் அறிவிப்புகளும் வெளி வந்திருந்தன.
மிகப் பார தூரமான அளவிலான ஒரு சூறாவளி வீசவுள்ளதாகவும், அதனால் பாரிய ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டு, அதற்கேற்ப முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆகவே இதனைக் கவனத்தில் எடுத்து அரசாங்கம் சில ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருக்குமாக இருந்தால் இந்த அனர்த்தங்களை ஓரளவுக்காவது குறைத்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகின்றது.
இயற்கையான அழிவுகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் கூட முற்கூட்டியே பல விடயங்கள் அறிய வருகின்ற பொழுது அதிலிருந்து மக்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அழிவுகளை ஓரளவுக்காவது குறைத்திருக்க முடியும் என்ற கருத்து காணப்படுகின்றது.
மலைநாட்டில் 400 இற்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தாலும் 350 க்கும் அதிகமானோர் காணாமல் போனதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே கிடைத்த தகவலின் அடிப்படையில் இவ்வாறான மண்சரிவுகள் ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து அந்த மக்களை வெளியேற்றியிருக்க முடியாதா?
மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயரிழந்த நிலையில் காணப்படுகின்றன. ஆகவே ஏற்கனவே கிடைத்த தகவலின் அடிப்படையில் மக்களுக்கு அறிவித்தல் கொடுத்திருந்தால் இந்த கால்நடைகளை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தி இருக்க முடியாதா?
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால் முற்கூட்டியே பல விடயங்கள் அறியக் கிடைக்கின்றன. இந்த அனர்த்தத்திலிருந்து உயிர்கள், உடைமைகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கமே எடுக்கவில்லை? அரசாங்கத்திடம் சகல வசதி வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆகவே அவர்கள் விரும்பிய அனைத்தையும் செய்திருக்க முடியும். இவ்வாறு இருக்கையில் அவர்கள் அதனை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் உள்ளது.
அரசாங்கத்தின் மேல் குற்றம் சாட்டுவதற்கு அப்பால், எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறும் போது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி இவ்வாறான விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
மண் சரிவு ஏற்படக்கூடிய மலைநாட்டில் உள்ள மக்களுக்கு நிரந்தரமான, சரியான மாற்று இடங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் ஏற்கனவே ஏற்பட்ட மண் சரிவுகளில்கூட பல மக்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். மண் சரிவுகள் ஏற்படக்கூடிய பகுதிகள் என பல பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.
கிராமம் கிராமமாக மக்கள் மண்ணுள் புதையுண்டு உள்ளார்கள். இவ்வாறான நிலைமை ஏற்பட்டதும் பிழை, இனிமேலும் ஏற்படாமல் அரசாங்கம் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேவையை இந்த அழிவுகள் உணர்த்தி நிற்கின்றது என்றுதான் நான் கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

