கண்டி மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம் எனவும்
இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் எனவும் பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான காணிகளில் முழுமையாக பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அனுமதியற்ற நிரமாணிப்புகளுக்கு இனிமேல் இடமில்லை எனவும்
பாதிக்கப்பட்ட மத்திய மலைநாட்டை சீர்செய்ய ஒரு நீண்டகாலத் திட்டம் தேவை எனவும்
அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினர் செய்து வரும் பணிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றது.

இதன்போது அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார்.

வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *