இலங்கையில் 06 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குள்ளாகியுள்ளனர். அதனை நாங்கள் மீட்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் வறுமையொழிப்பு என்ற ரீதியில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை தோல்வியுற்ற திட்டங்களாகவேயிருந்தது.
தங்களது அரசியல் வட்டத்திற்குள் அந்த செயற்பாடுகளை கொண்டு சென்றதே அதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிராமிய மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தும் பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கிராம மட்டங்களில் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிராமிய ரீதியில் வறுமையினை ஒழித்து சுபீட்சமான நாட்டினை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரிபுவின் தலைமையில் பிரஜா சக்தி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 48 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான பிரஜாசக்தி தலைவர்களுக்கான நியமன கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமங்களும் அடிப்படையில் அபிவிருத்திகளை காணவிருக்கின்றது. இதன் தலைவர்களாக நியமனம் பெறுபவர்கள். ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய பொறுப்புடன் இந்த கடமையை நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரபு இங்கு தெரிவித்தார்.








