
திருமலை, மார்ச் 14
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் 100 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம், இலங்கை மின்சார சபை ஒப்பந்தம் செய்துள்ளன.
சனிக்கிழமை இந்த ஒப்பந்தம் சந்தடியின்றி கைச்சாத்தானது. சம்பூர் பகுதியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க இந்தியா – இலங்கை அரசுகளிடையே கடந்த 2011இல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என திருகோணமலை மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், நல்லாட்சி அரசின் காலத்தில் மைத்திரிபால சிறிசேன அந்த திட்டத்தை ஒத்தி வைத்திருந்தார். எனினும், இந்திய கடனில் தங்கியுள்ள இலங்கை, தற்போது சம்பூரில் இந்திய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், தற்போது சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் திட்டம் மாற்யமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மின்சார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




