
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையை நடாத்துவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடதாசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவற்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரணதரப் பரீட்சையை கொரோனாத் தொற்று காரணமாக மே மாதம் 23 ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பரீட்சையில் சுமார் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் தோற்றவுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் போதும் பரீட்சைகள் திணைக்களத்திடம் போதியளவு கடதாசிகள் கையிருப்பில் இருக்கவில்லை. அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் கடதாசி பெற்றுக்கொண்டே பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




