
லாகூர், மார்ச் 14
இந்திய ஏவுகணை கடந்த 9-ந் திகதி பாகிஸ்தான் பகுதியில் போய் விழுந்தது. பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்று விட்டதாகவும், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்தது.
ஆனால், அந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கூறியது. சம்பவம் பற்றி கூட்டு விசாரணை நடத்த வலியுறுத்தியது. இந்தநிலையில் இந்திய ஏவுகணை விழுந்தது பற்றி முதல் முறையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாகாணம் கபிசாபாத் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- இந்திய ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்தவுடன், இந்தியாவுக்கு நாம் பதிலடி கொடுத்திருக்க முடியும். ஆனால், சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தோம். நாட்டையும், ராணுவத்தையும் நாம் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.




