ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியத் திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 980 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் குறித்துப் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 965 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இருவர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 528 கிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் 362 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 445 கிராம் கஞ்சா, 17 கஞ்சா செடிகள், ஒரு மில்லிகிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 626 போதை மாத்திரைகள், 237 கிராம் மதனமோதகம் மற்றும் 4 கிலோகிராம் 195 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.





