கஸ்டத்திற்கு மத்தியிலும் விடா முயறாசியே வெற்றிக்கு காரணம் என உயர்தரப் பெறுபேற்றில் கலைப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவி துவாரகா அல்லிராசா தெரிவித்துள்ளார்.
அம் மாணவி மேலும் தெரிவிக்கையில்,
கலைப் பிரிவில் நான் தமிழ், புவியியல் , அரசியல் ஆகிய பாடங்களை கற்று 3 ஏ சித்திகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன்.
எனது கிராமம் கோவில் புளியங்குளம். மிகவும் பின் தங்கிய கிராமம். எனது கிராம பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் வரை கற்று உயர்தரத்தை சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் கற்றேன்.
சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் எனது பெற்றோரின் கடின உழைப்பால் உறவினர் வீட்டில் தங்கி நின்று உயர்தரம் கற்றேன்.
நான் இந்த நிலைக்கு வருவதற்கு எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முக்கிய காரணம். அத்துடன் என்னை வழிப்படுத்தி சிறப்பாக கற்பித்த பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கும் நன்றிகள்.
அத்துடன் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தால் இறுதி நேரத்தில் நடத்தப்பட்ட செயலமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதனை நெறிப்படுத்தி நடத்திய வலயத்திற்கும் எனது நன்றிகள்
எனது கிராமத்தில் முன் முதலாக நான் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளேன். சட்டத்தரணியாக வந்து எனது பின் தங்கிய கிராம மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.



