ஈழத்துப் புகழ்பூத்த யாழ்.சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிசேகப் பெருவிழா இன்று (01) சிறப்பாக இடம்பெற்றது.
காலை 9.30 மணிக்கும் 11.46 மணிக்கும் இடைப்பட்ட சுபவேளையில் கும்பாபிசேகம் நிகழ்தேறியது.
சிவஸ்ரீ சி.சோதிரத்தினக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேக பெருவிழாவில்,50 மேற்பட்ட அந்தணக் குருமார்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இதேவேளை, நேற்றைய தினம்(31) எண்ணெய் காப்பு வைக்கும் நிகழ்வு காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இடம்பெற்றது.
மேலும், தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிசேகம் இடம்பெறவுள்ளது.
முன்னர் சோழர் காலத்து கட்டடக்கலை அம்சங்களோடு சிறப்புற்று விளங்கிய சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயத்தின் எல்லையில்,கிராமிய தெய்வமாக வீற்றிருந்து முத்துமாரி அம்மன் அருள் பாலித்து வந்தார்.
பிற்காலத்தில் போர்த்துக்கேயரால் சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயம் அழிக்கப்பட்டபோது ஆலய விக்கிரகங்களை குளங்களுக்குள் போட்டும், மண்ணில் புதைத்து வைத்தும் சைவப் பெரியார்கள் பாதுகாத்து வைத்தனர்.
அவ்வாறு புதைத்து வைக்கப்பட்டு பின்னாளில் புளியம் மரத்தடியில் காட்சி கொடுத்து, இற்றைவரையும் பக்தர்கள் வேண்டுவன எல்லாவற்றையும் கொடுத்து முத்துமாரி அம்மன் அருள்பாலித்து வருகிறாள்.





