கடுமையான வெப்பம் உயிருக்கு ஆபத்தாகலாம்! சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பத்தை பொதுமக்கள் எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம். இதனால் உயிரிழக்கும் அபாயம் கூட காணப்படுவதாக சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ ஆலோசகரான வைத்தியர் இனோகா சுரவீர எச்சரித்துள்ளார். 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

தற்போதைய கடும் வெப்பம் காரணமாக வெப்பத் தசைப்பிடிப்பு, வெப்பச்சோர்வு, மரணத்தை  ஏற்படுத்தக்கூடிய பக்கவாத பாதிப்புக்கு கூட ஆளாக நேரிடலாம்.

நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும். 

ஏனெனில், கடும் வெப்பத்தினால் அவர்களின் உடல்நிலை மோசமாகி, அதனால் உயிரிழப்பும் ஏற்படக்கூடும். 

விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற வெளிப்புற பணியாளர்கள்  உடல் நிலை குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும். அவர்கள் அதிகளவில் நீர் அருந்தவேண்டும். மது, கோப்பி, இனிப்புப் பானங்களைத் தவிர்க்கவேண்டும் என தெரிவித்தார். 

அவரைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல், தொழில், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்தனி விதான தெரிவிக்கையில்,

வெப்பம் அதிகரித்த இச்சூழ்நிலையில், இளநீர், எலுமிச்சை, ஒரெஞ்ச் பழச்சாறுகளை அருந்துவதும் வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை உண்பதும் நல்லது. 

முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான பொழுதுகளில் வெளியே செல்லும்போது பருத்தி ஆடைகளை குறிப்பாக, வெளிர் நிறப் பருத்தி ஆடைகளை அணிந்து செல்வது நல்லது. 

வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள குடை, தொப்பி எடுத்துச் செல்வதும் சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply