ரஷ்யாவில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்யாவில் உயிரிழந்த இலங்கை பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அந்தநாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் இலங்கையின் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (02) அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை மக்கள் மிகவும் நட்புறவானவர்கள் எனத் தெரிவித்த ரஷ்ய பிரதி அமைச்சர், இலங்கை ரஷ்யாவின் நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்தார். இந்த நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்த ரஷ்யா அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் உறுதியளித்தார்.

இலங்கை கடும் எரிசக்தித் தேவையிலுள்ள தருணத்தில், ரஷ்யா இவ்வாறான உதவிகளை வழங்க முன்வந்துள்ளமையை அமைச்சர் விஜித ஹேரத் பெரிதும் பாராட்டியுள்ளார். 

சுமார் 70 வருடங்களாக நிலவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் நீண்டகால வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

Leave a Reply