நாடாளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை முன்னிட்டு  கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும்  பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் இடம்பெற்றன.

ஆலய வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆராதனை வழிபாடுகளில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மன்னார்  மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றதுடன் தேவாலயங்களுக்கு பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (04) சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர்  மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில்  திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. 

இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply