கண்டியில் இடம்பெற்று வரும் வருடாந்த கிரிக்கெட் போட்டியை பார்வையிடச் சென்றபோது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவனும் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் ஏற்கனவே ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கும், கண்டி வித்தியார்த்த கல்லூரிக்குமிடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்காக, சில்வெஸ்டர் கல்லூரி மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இதன்போது எதிரே வந்த பேருந்துடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றைய மாணவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.





