தொடர்ச்சியாக மக்களுக்கு இடையூறாக வீதியில் வைத்து வாகனத்தில் இருந்து மரக்கறிகளை இறக்கிய வியாபாரியை கடுமையான எச்சரிக்கையின் பின்னர் பொலிஸார் விடுவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் தம்புள்ளையில் இருந்து மரக்கறிகளை கொண்டுவரும் வாகனத்தை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சித்தங்கேணி சிவன்கோவில் வீதியில் வைத்து, மரக்கறிகளை இறக்கி தனது வியாபார செயற்பாட்டிற்காக கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் அந்த வீதியால் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் இன்று இடம்பெறும்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த வியாபாரியை, இனிமேல் இவ்வாறு மக்களுக்கு இடையூறாக செயற்பட கூடாது என கடுமையாக எச்சரித்த பின்னர் விடுதலை செய்தனர்.





