
கொழும்பு, மார்ச் 15
நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடிகளை தீர்க்க தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் எந்த பயனும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை உயர்த்துவதற்கு அனைத்து தரப்புக்களுக்கும் இடையில் ஒரு தேசிய உடன்பாடு தேவை எனவும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாட்டின் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. நெருக்கடிக்குத் தீர்வு காண அரசாங்கம் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளதுடன், தீர்வுகளை வழங்கத் தவறியதால், நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
நிதியமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது. அதனை அரசாங்கம் தீர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும், அது இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கு பதிலாக தற்போதுள்ள நிலைமைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
கட்சி வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், நெருக்கடியை தீர்க்க தவறினால் அடுத்த சில மாதங்களில் மக்கள் நாட்டை இழக்க நேரிடும். நாடு பாதுகாக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பாகவும் அனைத்துத் தரப்பினருக்கும் இடையில் வலுவான உடன்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் ரணில் தெரிவித்தார்.