உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி! சுரேஷ் சலேவும் உடந்தை – அமைச்சர் ஆனந்த பரபரப்புத் தகவல்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

இன்று (09) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறினார். 

அத்துடன், சஹ்ரான் ஹாஷிமுக்கு மேலிருந்து அவரை இயக்கிய ஒரு நபர் மற்றும் குழு குறித்த ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். 

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான சதி மற்றும் அதற்கு உதவியளித்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். 

இஸ்லாமிய கடும்போக்காளர்களின் வன்முறைச் செயல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தும், அவற்றைத் தடுக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ தவறியமை.  தாக்குதல் நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தமை. 

தாக்குதலின் பின்னர், அதனை இயக்கிய சூத்திரதாரிகள் மற்றும் குழுக்கள் வெளிச்சத்திற்கு வருவதைத் தடுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply