அரச பேருந்து சாரதியுடன் முரண்பட்ட தனியார் சாரதி -அதிரடியாக பணித்தடை!

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட வவுனியா தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை  குறித்த தனியார் பேருந்து நடத்துநர், இ.போ.ச. சாரதியுடன் மிகவும் அநாகரிகமான முறையில் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. 

இக்காணொளியை ஆதாரமாகக் கொண்டு துரித விசாரணைகளை மேற்கொண்ட வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, நடத்துநரின் ஒழுங்கீனமான செயற்பாட்டை உறுதிப்படுத்தியது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன்,

குறித்த நடத்துநர் இனிவரும் காலங்களில் வடக்கு மாகாண வழியனுமதிப் பத்திரம் கொண்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அந்த வவுனியா தனியார் பேருந்தின் வழியனுமதிப் பத்திரமும் (Route Permit) இரண்டு நாட்களுக்குச் செல்லுபடியற்றதாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் ஊழியர்களின் ஒழுக்க மீறல்கள், போக்குவரத்து விதிமீறல்கள், மேலதிக கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply