கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த மூவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து இவர்கள் சுமார் 3 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக பணியகத்திற்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் ஏனைய சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை வைப்புச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, ஏனைய இரு சந்தேகநபர்களும் ஏப்ரல் 08 மற்றும் 09 ஆகிய திகதிகளில் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்று (09) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்களைப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களைச் சேர்ப்பதும் பணம் வசூலிப்பதும் சட்டவிரோதமானது. இதற்கு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
எனவே, அனுமதிப்பத்திரம் பெற்ற முகவர் நிலையங்கள் அல்லாத வெளி நபர்களிடம் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்க வேண்டாம் என வேலை தேடுவோரை பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஒருவரிடம் பணம் வழங்குவதற்கு முன்னர், அது குறித்து 1989 என்ற இலக்கத்தை அழைத்து பணியகத்திடம் தகவல்களைக் கேட்டறியுமாறும் மேலதிகமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.




