தாக்குதலில் உயிரிழந்த தனியார் பல்கலை மாணவன் – வெளியாகிய புதிய தகவல்!

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிரிப்பிட்டிய, நிக்கடலுபோத்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யசித் சத்துக்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அந்த விருந்தகத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது அங்குள்ள கழிவறைக்குச் சென்ற மாணவிகள் சிலரைத் தொடர்ந்து மற்றொரு மாணவியும் சென்றுள்ளார். 

அவர்கள் திரும்பி வருவதற்குத் தாமதமானதால், ஏனைய மாணவர்கள் அங்கு சென்றபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சி.சி.ரி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த மாணவன் அங்குள்ள நீச்சல் குளத்துக்கு அருகே திடீரெனக் கீழே விழுவது பதிவாகியுள்ளது. 

ஆரம்பகட்ட விசாரணைகளில் தாக்குதலே மரணத்துக்குக் காரணம் எனக் கருதப்பட்டாலும், அவரது உடலில் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகளுக்காகச் சடலம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த மற்றுமொரு மாணவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது எதிர்பாராத மரணமா என்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது. 

Leave a Reply