பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் குழந்தைகள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பெற்றோரின் கவனக்குறைவு காரணமாகவே குழந்தைகளுக்கு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அத்தகைய விபத்துக்களைத் தவிர்க்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு காலத்தில் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து தெளிவுபடுத்துமாறும், அவர்களை அந்த விளையாட்டுக்களில் ஈடுபடுத்துமாறும் வைத்தியர் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு செய்யாவிட்டால் குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளுக்குள் முடங்கிப் போய்விடுவார்கள்.
அத்துடன், கெவும், பாற்சோறு போன்ற பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பழங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குழந்தைகளின் மீதான கவனம் குறைவதைக் காண்கிறோம்.
குழந்தைகள் விளையாட வேண்டும், ஆனால் பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளைக் கையாளும் போது விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் பல குழந்தைகள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். இந்த வருடம் இதனைத் தவிர்த்துக்கொள்வோம்.
தந்தைமார் மது அருந்திவிட்டு குழந்தைகளுடன் வாகனங்களில் பயணிப்பதன் மூலம் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
அத்துடன், சுற்றுலா செல்லும் இடங்களிலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.





