சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நகரில் புத்தாண்டு வியாபாரமும் மக்கள் நடமாட்டமும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
கந்தளாய் நகரைச் சூழவுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான மக்கள், தமக்குத் தேவையான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரில் திரண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கந்தளாய் பிரதான வீதி மற்றும் வர்த்தக நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.
புத்தாண்டு கொள்வனவில் ஈடுபட்டுள்ள மக்கள், தற்போதைய சந்தை நிலவரம் குறித்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இம்முறை மரக்கறி விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக நுகர்வோர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இது சாதாரண குடும்பங்களுக்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
அதேவேளை, மரக்கறி விலைகள் குறைந்திருந்தாலும், மளிகைப் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சற்றே அதிகமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .









