அதிவேகத்தால் சுக்குநூறான வேன் – யாழில் பயங்கர விபத்து

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தொன்றில், வாகனத்தில் பயணித்த 7 பேர் எவ்வித காயங்களுமின்றி  உயிர் தப்பியுள்ளனர்.

அம்பன் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அதிவேகமாக பயணித்த வேன் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. 

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகில் இருந்த மதகுடன் மோதியுள்ளது.

மதகின் பாதுகாப்பு கற்கள் மூன்றை உடைத்துக்கொண்டு முன்னோக்கிச் சென்ற வாகனம், அங்கிருந்த மின்சாரக் கம்பம் ஒன்றின் மீதும் பலமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் வாகனம் அருகில் இருந்த வயல் நிலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தின் போது வாகனத்திற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் பயணித்த 7 பேரும் எவ்விதமான காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

அதிவேகமாக முந்திச் செல்ல முற்பட்டமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply