
கீவ், மார்ச் 15
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் போர் 3-வது வாரத்தை எட்டி வருகிறது. ரஷ்ய படைகள் நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் அதே வேளையில் போர் நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து வருகின்றன.
அந்த வகையில் பெலராஸ் நாட்டின் எல்லையில் கடந்த வாரத்தில் உக்ரைன்-ரஷியா அதிகாரிகள் இடையே 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தன. இதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் நேற்று 4-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்த பேச்சுவார்த்தை காணொலி காட்சி வாயிலாக நடந்தது. இதில் அமைதி, போர் நிறுத்தம், துருப்புக்களை உடனடியாக திரும்பப் பெறுதல் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து இருதரப்பும் விவாதித்தன. சில மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், இது நாளை(அதாவது இன்று) தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.