
கைக்குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் விற்பனையின் போது, தரமற்ற உற்பத்திகளை சந்தைப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , இலங்கை தர நிர்ணய நிறுவனம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம், கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம், தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கிடையில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போதே, நுகர்வோரு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், polycarbonate அடங்கிய பிளாஸ்டிக் பால் போத்தல்களுக்கு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் அனுமதி வழங்கப்படாத போதும், அவ்வாறான உற்பத்திகள் சந்தையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 18 நிறுவனங்களுக்கு மாத்திரமே, கைக்குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்படாது, குறித்த உற்பத்திகளை இறக்குமதி செய்யும் ஏனைய நிறுவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென மேலும் தெரிவித்துள்ளார்.