போதுமானளவு எரிபொருள் கையிருப்பில்

மீண்டும் எரிபொருள் விலை  உயராது

அமைச்சர் காமினி லொகுகே

மீண்டும் எரிபொருள் விலையை உயர்த்தும் எதிர்பார்ப்பு கிடையாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு போதுமானளவு பெற்றோல் மற்றும் டீசல் தற்போது கையிருப்பிலுள்ளதாகவும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையானளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு தேவையானளவு எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பே பேசுபொருளாகியுள்ளது. அத்துடன் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் அதில் உள்ளடங்கியுள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் உலக சந்தையில் எரிபொருளில் விலை அதிகரிக்கும்போது இங்கும் எரிபொருள் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்ளவே நேரும். எமது நாட்டில் 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்தபோது,  பெரும் பொருளாதார நெருக்கடிகள் காணப்படவில்லை. எனினும் அந்த அரசாங்கத்தின் காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதும் நெருக்கடிகள் ஆரம்பித்தன. அதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்பட்டது. வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேரடியாக எரிபொருள் கொள்வனவு செய்யும் முறைமையை மாற்றியது. பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது 190, 180, 85 என நீண்டகால கடனுடன் எரிபொருளைப் பெற்றுக்கொண்டது. அந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள எரிபொருளுக்கான பாரியளவு நிதியை தற்போது நாம் செலுத்தவேண்டியுள்ளது.

அதேபோன்று உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளை கடனுக்கு வழங்கும் முன்னைய முறைமை மாற்றப்பட்டுள்ளது. நாம் மிக நெருக்கடியான நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.

அதேவேளை நாட்டின் தற்போது எரிபொருள் தேவையானளவு கையிருப்பிலுள்ளது. அரசாங்கம் நஷ்டத்திலேயே மக்களுக்கு டீசலைப் பெற்றுக் கொடுக்கின்றது.

இதனால் மக்கள் சில அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுகிறது. அவற்றுக்கும் நாம் நிவாரணம் வழங்கியே நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றோம்.தற்போது எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை மேற்கொண்டாலும் அவர்களால் தீர்வொன்றை முன்வைக்க முடியாதுள்ளது.

இந்த நிலையை மாற்றுவது தொடர்பில் அவர்கள் எந்த மாற்றுவழிகளையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். எரிபொருட்களின் விலை மீண்டும் உயரும் என சமூகத்தில் பேசப்படுகின்ற போதிலும், மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *