
தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என வெளிநாடுகள் அறிவுறுத்தியுள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது வீழ்ச்சி நிலையில் உள்ளது. ஏனென்றால் வரலாற்றில் முதன் முறையாக நாட்டில் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கப்பலில் பொருட்கள் இருந்தும் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாத நிர்பந்தத்தில் நாடு உள்ளது.
நேற்று இங்கிலாந்து அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு செல்வதை தவிருங்கள் என்று. இலங்கையில் மருந்துகள் தட்டுப்பாடு காணப்படுகிறது, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே செல்வதை தவிருங்கள் என்று கூறியுள்ளது.
இச் செய்தி ஒரு ஆபத்தான செய்தி என்றே கூற வேண்டும். இவ்வாறான விடயம் நாட்டின் மரியாதையை கெடுக்கும் விடயமாகும். இவ்வாறான நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது.
கடந்த ஆட்சியில் எரிபொருளின் விலை ரூ. 2 ஆக அதிகரித்த போது அமைச்சர்கள் சைக்கிளில் சென்றனர். அவ்வாறு எதிர்ப்பை தெரிவித்த அமைச்சர்கள் உள்ள அரசாங்கத்தில் இப்போது 75 ரூபாவால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பாண் ஒரு இறாத்தல் ரூ. 30 இல் அதிகரித்துள்ளது.
என்ன அரசாங்கம் இது தயவு செய்து இது குறித்து கவனம் செலுத்துங்கள்.- என்றார்.