வவுனியாவில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு: பெண் மீதும் தாக்குதல்!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் நின்ற பெண் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்ததுடன், ஒரு பிள்ளை பாடசாலைக்கும், மற்றைய பிள்ளை உறவினர் வீட்டிற்கும் சென்றிருந்தனர்.

உறவினர் வீட்டிற்கு சென்ற பெண் பிள்ளை பகல் 11 மணியளவில் தனது வீட்டிற்கு வந்து அறை ஒன்றுக்குள் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வீடு புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த அலுமாரி, சாமி அறை மற்றும் ஏனைய பகுதிகளில் சோதனை செய்ததுடன், குறித்த பெண் பிள்ளை அறையில் இருந்து வெளியில் வந்த போது அந்த பெண் மீது கதவு சட்டத்தினால் தாக்கிவிட்டு அப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றையும் அறுத்துச் சென்றுள்ளனர். இதன்போது 2 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பெண் பிள்ளை அயலவர்களை அழைத்ததுடன், தமது பெற்றோருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா உக்குளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு பகுதிகளில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *