தாறுமாறாக உயர்ந்த பொருட்களின் விலை – தனது கொள்கையை மாற்றாத அரசு!

ஒரு குடும்பம் 30,000 – 40,000 ரூபா மாத வருமானத்தில் வாழ முடியாத நிலையில் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் வீதிக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களை தவறாக வழிநடத்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததது. அரசாங்கத்தின் தவறான கொள்கைகளினால் இந்த நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

சரியான கொள்கைகளைப் பின்பற்றுவதற்கான அழைப்புகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கத் தவறிவிட்டது. இந்த மோசமான நிலைமையை அரசாங்கம் புரிந்துகொள்கிறதா?.

ஜனாதிபதிக்கும் நிதியமைச்சருக்கும் நிதி அல்லது பொருளாதாரம் பற்றிய அறிவு இல்லாத ஒரே நாடு இலங்கை மாத்திரமே. எனினும் நாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலைமை குறித்து பிரதமருக்குத் தெரியாமல் இருப்பது வழமையானது.

டீசல் தட்டுப்பாடு காரணமாக 40,000க்கும் மேற்பட்ட பாடசாலை வேன்களில் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.

தற்போதுள்ள நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அரசாங்கம் தனது கொள்கைகளையும் நிர்வாகத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது இராஜினாமா செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *