உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் வேண்டும்: சஜித்

கொழும்பு, மார்ச் 15

தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் இறுதியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் பல்வேறு வழிகளில் அவதியுறுகின்றார்கள்.

அவர்களுக்கு தீர்வு வழங்க அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை. தேசிய அரசாங்கம் ஒன்றில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை. அமைச்சுக்களின் எண்ணிக்கை, கட்சி உறுப்பினர்களுக்கான பதவிகள் என்று பல ஒப்பந்தங்களை செய்து அரசாங்கத்துடன் இணைகின்ற செயற்பாடுகளில் தாம் ஈடுபட போவதில்லை.

நாட்டு மக்களுக்கு நாட்டின் ஆட்சி தேவையில்லை. நாட்டுக்கான சேவையே அவர்களுக்கு தேவை. அந்த சேவையை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது. அரசாங்கத்திடம் எந்தவிதமான மாற்றுத் தெரிவும் இல்லை. மாற்றுத் தெரிவு என்பது ஐக்கிய மக்கள் சக்திதான்.

இந்த நிலையில், ஊழல் மோசடிகளற்ற சிறந்த ஆட்சியை நடத்துவதற்கு தாம் தயாராகவே இருப்பதாக சஜித் பிரேமதாஸ இதன்போது அறிவித்தார். பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

கொழும்பு நகரில் இரண்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. ‘நாடு நாசம் – இது போதும்’ – ‘இனியும் நாசமடைய இடமளிக்க முடியாது’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பேரணிகளில் பங்கேற்றிருந்தனர்.

நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் இந்தப் பேரணிகளில் கலந்துகொண்டனர்.

ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி, மாளிகாவத்தை பீ.டீ. சிறிசேன மைதானத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகி, தொழில்நுட்ப சந்தி, புறக்கோட்டை பேருந்து தரிப்பிடம், கோட்டை தொடருந்து நிலையம் ஊடாக ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்தது.

மற்றுமொரு பேரணி, பொதுநூலகத்திற்கு அருகில் ஆரம்பமாகியதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அந்த இடத்தில் போராட்டத்தில் இணைந்துகொண்டார்.

இந்தப் பேரணியானது, பித்தளை சந்தி, கொள்ளுப்பிட்டி, காலிமுகத்திடல் ஊடாக ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்தது. இதன் காரணமாக, ஜனாதிபதி செயலக வளாகத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

காவல்துறையினர், கலகம் அடக்கும் படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இரண்டு பேரணிகளில் ஈடுபட்டவர்களும், ஜனாதிபதி செயலக முன்னறலில் ஒன்றுதிரண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், சவப்பெட்டி ஒன்றை தீ வைப்பதற்கு முயற்சித்ததுடன், அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *