
மாஸ்கோ, மார்ச் 16
உக்ரைன் மீது உக்கிர போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது. அதில் 11 ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையும் அடக்கம்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவு மந்திரி ஆன்டனி ஜே.பிளிங்கன், பாதுகாப்பு மந்திரி எல்.ஆஸ்டின், கூட்டு ராணுவ தளபதிகளின் தலைவர் எம்.மில்லே, பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும்,தூண்டும் மேலும் பல அமெரிக்க அதிகாரிகள், பிரமுகர்கள் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதேநேரம், அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.